சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அணையின் கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பழத்தோட்டம் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள பச்சை புல்வெளிகளில் தீவனம் உட்கொள்வதோடு அங்குள்ள கசிவு நீரை குடித்துவிட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் அணையின் கரையோரம் உள்ள தார்சாலையில் ஜாலியாக நடமாடுகின்றன. மேலும் யானைகள் தனது தந்தங்களால் அன்புச் சண்டை போட்டபடி ஜாலியாக சுற்றித் திரிகின்றன.
நேற்று காலை அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்த யானைகள் கூட்டத்திலிருந்த இரண்டு யானைகள் தனது தந்தத்தால் மோதி முட்டிக்கொண்டு விளையாடி மகிழ்ந்தன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணை நீர்த்தேக்கப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அணையின் கரைப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வோர் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.