×

2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்துக்கு சீல்

புதுடெல்லி: சிஆர்பிஎப் மூத்த அதிகாரியின் தனி உதவியாளர் மற்றும் துணை ராணுவப்படையின் பேருந்து ஓட்டுநர் ஆகியோருக்கு கொரோனா  அறிகுறி உறுதி செய்யப்பட்டதையடுத்து சிஆர்பிஎப் தலைமையகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டெல்லி லோதி சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள  சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரியின் தனி உதவியாளருக்கு நேற்று முன்தினம் கொரோனா அறிகுறி உறுதி  செய்யப்பட்டது. இதுதவிர, படையினை அழைத்து செல்லும் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து இங்குள்ள தலைமை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்காக சீல் வைக்கப்பட்டது.

இதனால் நேற்று முதல் அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், ஊழியர்கள் இருவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்க சிஆர்பிஎப் தகவல்  தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். அதோடு நோய் தொற்று கண்டறியப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையும்  தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்டிஎம் தர அந்தஸ்து அதிகாரி ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டார். சிஆர்பிஎப் படையில்  இதுவரை 135 பேர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : headquarters ,CRPF ,Delhi CRPF ,Delhi , Corona, Delhi, CRPF Head Office, Seal
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை