திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன்முறையாக சசிதரூர் எம்பி ஏற்பாட்டில் கேரளாவுக்கு காய்ச்சல் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்க்கான முதல் அறிகுறியாக காய்ச்சல் கருதப்படுகிறது. இந்த காய்ச்சலை கண்டறியும் வகையில், உடல் வெப்பநிலையை அளவிட தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவராக மட்டுமே காய்ச்சல் உள்ளதா என கண்டறிய முடியும். பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள் உட்பட ஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி உடல் வெப்பநிலையை கண்டுபிடிக்க அதிக நேரத்ைத செலவிட வேண்டும்.
இதையடுத்து ஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காய்ச்சல் இருப்பவர்களை கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ‘தெர்மல் அன்ட் ஆப்டிக்கல் இமேஜிங் பேஸ் டிடெக்சன் கேமராக்கள்’ கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு கேமராவின் விலை 7 லட்சம் ஆகும். திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஏற்பாட்டின்படி, நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இவை வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன் முதலில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.