லண்டன்: கொரோனாவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கிலாந்து பிரதமர் சிகிச்சையில் இருந்தபோது, ஒருவேளை பிரதமர் இறந்துவிட்டால், அதை எப்படி அறிவிப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்திய விவரம் இப்போது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அங்கு இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (55) வைரஸ் தொற்றியது. இதனால் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்றனர். முதலில் பாதிக்கப்பட்ட இளவரசர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று தொடக்க நிலையில் இருந்ததால், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது மார்ச் 27ம் தேதி. ஆனால், ஏப்ரல் 5ல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர் பிழைத்தார். இதையடுத்து கடந்த மாதம் 12ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், தனது மருத்துவமனை அனுபவங்கள் தொடர்பாக போரிஸ் ஜான்சன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: வீட்டில் என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டபோது, டாக்டர்கள் வந்து சோதனை செய்தனர். என் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால், உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினர்.
ஆனால், ஏன் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா என்று ்அவர்களிடம் கேட்டேன். ஆனால், கட்டாயம் மருத்துவமனைக்கு சென்றே ஆக வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தினர். உடனடியாக மருத்துவமனைக்கு சென்றதால்தான் என்னை காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர்கள் கூறியது, இப்போதுதான் விளங்குகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் நான் அரைகுறை மயக்கத்தில் இருந்தேன். அப்போது ஒருவேளை நான் இறந்துவிட்டால், அதை எப்படி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்று குறித்து உயரதிகாரிகளும் மருத்துவர்களும் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். என்னால் பேச முடியாவிட்டால் கூட, அவர்கள் பேசுவதை என்னால் உணர முடிந்தது. நான் உயிர் பிழைத்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்றேன். அந்த விடாப்பிடியான உறுதிதான் என் உடலில் இருந்து கொரோனா விலக ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.