புதுடில்லி: மத்திய அரசு மார்ச் 24-ல் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இப்போது நாட்டின் நிலைமை பயங்கரமாக இருந்திருக்கும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,306-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 24 ம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது அந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்காமல் இருந்திருந்தால் இப்போது நாட்டின் நிலைமை படுபயங்கரமாக இருந்து இருக்கும். அப்போது நாடு கொரோனா வைரசை எதிர்க்க தயார நிலையில் இல்லை. சமூக விலகல் குறித்து நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும், சோதனை கருவிகளும் அப்போது இல்லை. மருத்துவமனைகளும் தயாராகாமல் இருந்தது.
டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில் திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை. இறுதி சடங்குகளில் பங்கேற்க 20 பேருக்கு மேல் அனுமதியில்லை. டில்லி அரசால் ஊரடங்கை நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது. கடந்த ஆண்டு ஏப்., மாதத்தில் மாநில வருவாய் ரூ. 3500 கோடியாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு ரூ.300 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.