டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,306-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளை கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த வைரசின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் வல்லரசு நாடுகள்கூட விழிபிதுங்கி நிற்கின்றன. சமூக விலகல் ஒன்றைத் தவிர கொரோனாவை அழிக்க வேறு எந்தவொரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், ஊரடங்கை நம்பியே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கே ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கப்போகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிடும் விவரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 40 ஆயிரத்து 263 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவியவர்களில் 28 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு நாடு முழுவதும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 886 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.