பெரியகுளம்: பெரியகுளம் அருகே, சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. பலன் அளிக்கும் நிலையில் உள்ள வாழை மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால், ரூ.25 லட்சம் வரை சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், இயற்கை சீற்றத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.