×

நீலகிரியில் தொடர் மழை எதிரொலி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மஞ்சூர்:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65, மின்சாரம்  தயாரிக்கப்படுகிறது. மேலும் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப் படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அறவே மழை இல்லாததால் ஆறுகள், சிற்றோடைகள் வறண்டு போனது. இதனால் அணைகளுக்கான நீர் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. சமீப காலம் வரை அணைகளில் உள்ள நீரின் மூலமாகவே பெரும்பாலான மின் நிலையங்களிலும் மின்சார உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் இருப்பில் உள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக குந்தா, ஊட்டி, குன்னுார் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த ஆறுகள், சிற்றோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக குந்தா, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளுக்கும் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதை தொடர்ந்து மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nilgiris Nilgiris , Increased ,water flow , dams, Nilgiris
× RELATED நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி