×

வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

சியோல்: வடகொரியாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இதன் மூலம் அவரது உடல்நிலை குறித்து நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது-.வடகொரியாவில் கடந்த 11ம் தேதி தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அதற்கு அடுத்த நாள் போர் விமானங்களை அதிபர் கிம் பார்வையிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் பின்னர் அதிபர் கிம் ஜாங் எந்த பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளாததோடு எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை. குறிப்பாக ஏப்ரல் 15ம் தேதி நடந்த வடகொரியாவின் நிறுவனரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிங் சங் இல்லின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் பங்கேற்கவில்லை.

இது அவரது உடல்நிலை குறித்த பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. கடந்த 2011ம் ஆண்டு அதிபராக கிம் பொறுப்பேற்றது முதல் இந்த விழாவை விமரிசையாக கொண்டாடி வந்த நிலையில் முதல் முறையாக விழாவை அவர் தவிர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து கிம் ஜாங் உன்னுக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் புகைப்பிடித்தல், உடல் பருமன், உடல் சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதிபர் கிம் ஜாங் உன் வெளியே வராததால் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்கள் வலுவடைந்தன. ஏனென்றால் கிம்மின் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் வெளி உலகிற்கு தெரியவந்தது.

மேலும் அவரது சகோதரி ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. எனினும் தென்கொரியா தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு கூட சுமார் 6 வாரங்கள் அதிபர் கிம் பொது வெளியில் தோன்றவில்லை. அதிபர் கிம் உடல்நிலை மோசமாகி இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என மோசமான வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழாவில் அதிபர் கிம் கலந்து கொண்டார்.

ரிப்பன் வெட்டி அவர் தொழிற்சாலையை திறந்து வைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் உற்சாகத்தோடு கைகளை தட்டி மகிழ்ந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விழாவில் அவரது சகோதரி மற்றும் ஆலோசகரான கிம் யோ யாங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் தொழிற்சாலையை ஆய்வு செய்து உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், தனது தாத்தா மற்றும் தந்தை, நவீன உர தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்” என்றார். பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டதன் மூலமாக அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kim Zhang ,Kim Jong-nin: Attending a Public ,North Korean ,event , North Korean President Kim Zhang, rumors, curfew, corona
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை