×

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் ஊரடங்கு நேரத்தில் என்ன செய்யலாம்?சித்த மருத்துவர் ஜீவிதா விளக்கம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் வகையில் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவர் ஜீவிதா கூறியுள்ளார். இது குறித்து சித்த மருத்துவர் ஜீவிதா கூறியதாவது: உலகம் முழுக்க கடந்த நான்கு மாதங்களாக உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரே வார்த்தை கொரோனா எனப்படும் கோவிட்-19. இந்த நோயினால் அதிகம் பாதிப்பிற்குள்ளானவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் 50 வயதை கடந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. இந்நோயிலிருந்து வயது முதிர்ந்தோர் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம். கோவிட்-19 நோயிலிருந்து தற்காத்து கொள்ள சித்த மருத்துவ வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பி விட முடியும்.

பொதுவாக சித்த மருத்துவத்தின் அடிப்படையே நோயில்லா வழிமுறை என்பது தான். சித்த மருத்துவத்தின் ‘’ உணவே மருந்து மருந்தே உணவு’’ என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்து வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது.  இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நாம் அன்றாட பழக்க வழக்கதிலிருந்து வாழும் முறையும் உண்ணும் முறையும் சிறிதளவு மாற்றினாலே போதும் கொரோனாவில் சிறந்த முறையில் பாதுகாத்து கொள்ளலாம். அதில் முதல்படியாக காலையில் எழுந்தவுடன் டூத் பேஸ்ட்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு திரிபலா சூரணம் என்ற மருந்தை கொண்டு பல்துலக்கி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை மாலை என இரு வேளையும் வாய் கொப்பளிக்க வேண்டும். இது நாம் வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்புகளில் உள்ள டயலின்  என்ற என்சைம் நோய் எதிர்ப்பாற்றலில் முக்கிய பங்கு வகுக்கிறது.

உமிழ்நீரின் சுரப்பு சரியாக இருந்தால் தொண்டை பகுதி, வயிறு மற்றும் குடல் பகுதியில் உண்டாகின்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். அடுத்ததாக வாய் கொப்பளிக்கும் முறையில் கவனம் செலுத்தினால் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். திரிபலா சூரணம், இலவங்கம், உப்பு போன்றவற்றை வெந்நீரில் கலந்து காலை மாலை இருவேளையும் வாய் கொப்பளிக்க நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். மேலும் கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது தொண்டை பகுதியை தான் எனவே அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முக்கியமான முறை இது. இம்முறையில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.  குறிப்பாக இது வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்.

அதில் மஞ்சள் கலந்து ஆவி பிடித்தல், வேப்பிலை, நொச்சி இலை, தும்பை, ஆடாதொடை, யூக்கலிப்டஸ் தைலம், இலவங்கம் தைலம், ஓம உப்பு, புதினா உப்பு கலந்த நீர் போன்றவற்றில் ஆவி பிடிக்க சிறந்த முறையில் பயன் தரும். இதனை நாசி வழியாக உள்ளிழுத்து வாய் வழியாக வெளிவிடலாம் அல்லது வாய் வழியாக உள்ளிழுத்து வாய் வழியாகவே வெளிவிடலாம். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூலிகை ஆவிபிடிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்தால் நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகள் தூண்டப்பட்டு வாயு பரிமாற்றம் துரிதமாக செயல்படும். அதோடு மார்பு சளியையும் முற்றிலும் கரைத்துவிடும். ஆவி பிடிக்கும் போது தலை சுற்றல், மயக்கம், மூச்சு திணறல் ஏற்படும் பட்சத்தில் ஆவி பிடிக்கும் நேரத்தை குறைத்தோ அல்லது தவிர்த்து கொள்ள வேண்டும்.

 அதைப்போன்று நாம் உள்மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பயன்களை போலவும், வெளிமருந்துகளும் மிகுந்த பயனளிக்கும். அதை உணர்ந்த சித்தர்கள் உள் மருந்து 32 புற மருந்து 32 என்று சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். நாம் உண்ணும் உணவில் மிளகு, இலவங்கம், சீரகம், அன்னாசி பூ, இஞ்சி, சுக்கு போன்றவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள ஆல்கலாய்டுகள், பிளேவனாயிட்ஸ் மற்றும் டானின்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலில் சிறந்த முறையில் செயல்படுகிறது. இதை தினசரி உணவில் மிளகு இரசம் என்ற கூட்டு மூலிகை கலவையை பயன்படுத்த வேண்டும். பொதுவாக சர்க்கரை நோயாளர்கள் காலையில் உண்ணும் உணவில் வெந்தயமும், மதிய உணவில் ஆவாரம் பூ இரசம், மாலை நேரத்தில் கொத்துமல்லி தேனீர், இரவில் திணை அரிசியில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

மேலும் ரத்த அழுத்த நோயாளர்கள் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்க தினமும் முருங்கை கீரை, சீரகம் சம அளவு எடுத்து அதில் சூப் செய்து குடிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு உணவில் அதிகம் சேர்த்து கொள்வது சிறந்தது. அதைப்போன்று கொத்தமல்லி தேனீர் அருந்த வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அனைத்து வகை நோயாளர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீரை தினமும் ஒரு வேளை மருத்துவரின் ஆலோசனைபடி குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் கபசுரக் குடிநீரில் உள்ள 15 மூலிகை பொருள்களில் ஏராளமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் உள்ளது. அது சிறந்த முறையில் நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கி வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் அதில் முக்கியமாக ஆடாதொடை, நிலவேம்பு, சிற்றரத்தை, இலவங்கம், கோரைக்கிழங்கு, கோஷ்டம் போன்ற மூலிகைகளில் அதிகளவு பிளேவனாய்ட்ஸ் அடங்கியுள்ளது.

இவை நம் உடலிலுள்ள இன்டர்பிரான் ஆல்பா-2பி என்ற புரதத்தை அதிகப்படுத்தி நம் உடலை வைரஸ் பெருக்கத்திலிருந்து கட்டுப்படுத்துகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்த மற்றொரு வழி மூச்சு பயிற்சி எனப்படும் பிராணாயாமம். இதன் மூலமாக நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக சிறந்த முறையில் அமைகிறது. இதை காலை மாலை என வெறும் வயிற்றில் 10 முறை செய்தால் போதும். இந்த மூச்சுப் பயிற்சியினால் நுரையீரலின் பலம் அதிக படுத்தப்பட்டு, நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது இதனால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Blood pressure sufferers ,curfew , Blood pressure, wheezing, curfew, paranoid doctor Jeevitha
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்