தம்மம்பட்டி: சேலம் அருகே மலைக்கிராமங்களில் இருந்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கால், உணவுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். தங்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கொல்லிமலை அடுக்கம், பச்சமலை பெரியநாகூர் ஆகிய மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மற்றும் நாமக்கல், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று, கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளுர் மாவட்டம், மூடிகடை தாலுகா, ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தாரைக்குடி எஸ்டேட்டில் மிளகு பறிக்கும் பணிக்கு சென்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் தமிழக தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல், வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். தங்களிடம் எஞ்சியிருந்த பணமும் முடிந்து விட்டதால், தற்போது உணவின்றி குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். இதையடுத்து, கர்நாடகா மாநில வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம், தங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கர்நாடக எஸ்டேட்டில் உணவின்றி சிக்கித் தவிக்கும் தங்களை மீட்டு, தமிழகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.