×

பெரும் குழப்பத்தில் உலக தலைவர்கள்; அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக புகைப்படம் வெளியிட்டது வட கொரியா செய்தி நிறுவனம்

சியோல்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும்  உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், கிம் நலமுடன் இருக்கிறார்  என்று, தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ, கடந்த 15-ந் தேதி நடைபெற்ற வடகொரிய நிறுவனரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சுங் பிறந்த நாள்  விழாவில் பங்கேற்காததில் இருந்து கிம்மிற்கு உடல் நலமில்லை அல்லது காயப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி. அவருக்கு உண்மையிலேயே ஏதாவது அறுவை சிகிச்சையோ வேறு ஏதேனும் நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு  விஷயம் தெளிவு, அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார். வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில் வாழ்ந்து வரும் தே யோங் ஹோ அண்மையில் நடைபெற்ற தென்கொரிய  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்சோன் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடந்த விழாவில் பங்கேற்றதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற  புகைப்படங்களை வட கொரியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. உடல் நலம் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் பொது நிகழ்வில் கலந்து  கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலக தலைவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங் உன், கடைசியாக ஏப்ரல் 11-ம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Kim Jong Un ,World leaders ,news agency ,event ,North Korea , World leaders in great chaos; North Korea news agency has released a photo of President Kim Jong Un attending a public event
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...