புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சரை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத மக்களவை காங்கிரஸ் தலைவர், அவருக்கு எழுதிய கடிதத்தில் தயவுசெய்து என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சிக்கி தவிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
அதன்பிறகு, கடந்த 4 நாட்களாக உங்களைத் தொடர்புக் கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்புக் கொள்ள முடியவில்லை. ஊரடங்கினால் நாட்டின் பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் மேற்கு வங்க தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி உங்களுடன் அவசரமாக கலந்து ஆலோசிக்க சிறிது நேரம் ஒதுக்கும்படி கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அதிர் ரஞ்சன் கடிதத்தில் கூறியுள்ளார்.