×

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: பெண் உட்பட 14 பேருக்கு குண்டாஸ்

அண்ணாநகர்: சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் உடலை கடந்த 19ம் தேதி அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய மாநகராட்சி உதவி செயற் பொறியாளர்கள் செந்தில்குமார் (42). கலையரசன் (34), பொக்லைன் டிரைவர் முத்தரசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னை சத்யா நகர் மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொக்லைன் டிரைவர் ஆகிய மூவரையும் தாக்கினர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. ஆம்புலன்ஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.

காயமடைந்த மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று இரவு முழுவதும் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவரின் உடலை தகுந்த பாதுகாப்புகளுடன் நல்லடக்கம் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவன், பெண் உட்பட 22 பேரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Tags : doctor , Physician Body, Woman, Kundas
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்