குளச்சல்: ரோந்து பணியில் ஈடுப்பட்ட ஏ.எஸ்.பி.யிடம் மூதாட்டி மீன் வாங்கி கேட்டார். அவருக்கு உடனடியாக போலீசார், மீன் வாங்கி கொடுத்தனர். கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள், கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக மீனவர்கள், கடலுக்கு செல்லவில்லை. கடந்த வாரம் மீன்துறை அனுமதியளித்ததை அடுத்து 29ம் தேதி முதல் குளச்சல் சுற்று வட்டார கட்டுமர மீனவர்கள் சுழற்சி முறையில் மீன் பிடிக்க தொடங்கி உள்ளனர். இதற்கிடையே ஏழைகள், விதவைகள், ஆதரவற்றவர்களுக்கு காவல் துறை மற்றும் தன்னார்வலர்கள் அரிசி, காய்கறிகள் அளித்து வருகின்றனர். சி.எம்.சி.காலனியில் நேற்று ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி.சாஸ்திரி ரோந்து சென்றார்.
அப்போது, திண்ணையில் சோகமாக அர்ந்திருந்த ஒரு மூதாட்டியை பார்த்ததும் ஏ.எஸ்.பி. தனது ஜீப்பை நிறுத்தினார். பின்னர் மூதாட்டியிடம் என்ன? ஏதுவென்று விசாரித்தார்.
அப்போது மூதாட்டி, ‘‘ஐயா போன வாரம் அரிசி, காய்கறிகள் கொண்டு வந்து கொடுத்தீங்க. மீன் சாப்பிட்டு ஒரு மாதமாயிடுச்சு. கொஞ்சம் வாங்கி கொடுங்கைய்யா’’ என அப்பாவித்தனமாக கேட்டார். மூதாட்டியின் நிலைமையை புரிந்து கொண்ட ஏ.எஸ்.பி. உடனே மூதாட்டிக்கு மீன் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து குளச்சல் டிராபிக் போலீசார், குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கு விரைந்து சென்று மீன் வாங்கி மூதாட்டிக்கு கொடுத்தனர்.