சென்னை: அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்ைக: மத்திய அரசு கடந்த மாதம் 24ம் தேதி வெளியிட்ட அரசிதழில் காவேரி நீர் மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் பொருண்மைகளில் மத்திய அரசு அலுவலக விதிகளின் படி சேர்த்து அறிவிக்கை செய்துள்ளது. மத்திய ஜல் சக்தி துறை செயலாளர் சிங் இது வழக்கமான அலுவலக நடைமுறையே என்றும் இதனால் காவேரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதை தெளிவுபட குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைச்சகங்கள் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக இந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தலைவர், உறுப்பினர் போன்றவர்களை நியமித்தல் அவர்களின் சம்பளம் நிர்ணயம் செய்தல் போன்ற பணிகள் மட்டுமே ஜல் சக்தி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும்.
எனவே காவேரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சிப் பணிகளில் ஜல் சக்தி அமைச்சகம் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தின் சார்பாக காவேரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்களும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.