கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. வெவ்வேறு மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் மீட்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். அதில்; வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதாக இருந்தால் அவர்களே அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். அரசு வழங்க கூடிய சிறப்பு பயண பாஸை முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கக்கூடிய பாஸ்கல் தனித்தனி கலர்களில் இருக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.