×

கொரோனா வைரசுக்கு அமெரிக்கா புதிய மருந்து: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய மருந்துக்கு விரைவில் அங்கீகாரம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. இங்கு இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 61,656 ஆக உள்ளது. ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருந்தை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ‘ரெமெடிசிவிர்’ என்ற மருந்து நோய் தொற்றில் இருந்து நோயாளிகள் விரைவாக மீட்பதற்கு உதவும் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.  

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான எந்தவொரு மருந்துக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
எனினும், ரெமெடிசிவிர் மருந்துக்கு அவசரகால பயன்பாடு அங்கீகாரத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில், ரெமெடிசிவிர் தயாரிப்பாளரான கிலியட் சயின்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெமெடிசிவிர் மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகள் மற்ற நோயாளிகளை காட்டிலும் வேகமாக குணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த டாக்டர் அந்தோணி பாசி, நோயில் இருந்து மீள்வதற்கான நேரத்தை குறைப்பதில் ரெமெடிசிவிர் ஒரு தெளிவான குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



Tags : US ,announcement , Corona, USA, New Drug
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!