×

பால் நிறுவனத்தில் பணிபுரிந்த 16 பேர் சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டனர்

திருமலை: ஐதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு சொந்தமான பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பால் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உப்பல் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கடந்த 25ம் தேதி தொழிற்சாலைக்கு வந்தனர். அப்போது, தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ராம்ந்தப்பூரை சேர்ந்த செக்யூரிட்டி ஒருவரின் தந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் 21ம் தேதியில் இருந்தே பணிக்கு வரவில்லை. ஆனாலும்  அவருடன் பணிபுரிந்து வந்த 7 செக்யூரிட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ  என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர்.

மீண்டும் 26ம் தேதி வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபருடன் நெருங்கி பழகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலும் 8 செக்யூரிட்டிகளை   வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பினர். இந்த 16 பேரும் முன்னெச்சரிக்கையாக மட்டுமே தனிமைப்படுத்த அனுப்பி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி பல்லவி, மருத்துவர் தனசேகர் தெரிவித்திருக்கிறார்.  தொழிற்சாலையில் அரசாங்க மற்றும் அங்கீகாரம் பெற்ற நபர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : dairy company , Milk Company, Suspicion, Corona, Curfew
× RELATED மதுரை ஆவின் பால் நிறுவனத்தில்...