திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி: தற்போது நாம், நெருக்கடியான முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம். தொழில்களை முடக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தொழிலை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மனிதன் உயிரோடு இருப்பது முக்கியம். ஆகவே பொதுமக்களின் உயிரைக்காப்பதுதான் அரசின் தலையாய கடமை.விசைத்தறி உரிமையாளர்கள தங்கள் பிரச்னைகளைத் தீர்க்குமாறு கூறினர். நானும் இந்த தொழிலில் இருப்பவன்தான்.
அவர்களது பிரச்னைகள் நன்கு தெரியும். தறிகள் ஓட்டப்படாத காரணத்தால் மின் கட்டணம் கட்டும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வரிடமும், மின்துறை அதிகாரிகளிடமும் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். கொரோனாவின் தாக்கத்தால் தொழில்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர ஓர் ஆண்டு காலம் பிடிக்கலாம். கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவை நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.