சென்னை: வேளாண் விளைபொருட்களை விற்க மற்றும் வாங்க தமிழக அரசின் உழவன் இ சந்தை செயலி கட்டணமில்லா சேவை உருவாக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கவும், வியாபாரிகள் வாங்கவும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்களாகவே வியாபாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு கட்டணமில்லா ‘உழவன் இ சந்தை’ எனும் சேவையை உழவன் செயலி மூலம் உருவாக்கியுள்ளது.
இந்த சேவையின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளை பொருட்களையும் பதிவு செய்து கொள்ளலாம். வியாபாரிகள் மாவட்டம் வாரியாக மற்றும் பயிர் வாரியாக விவசாயிகள் விற்பனை செய்யவுள்ள விளைபொருட்களை இச்செயலின் மூலம் பார்த்து விருப்பம் தெரிவிக்கலாம். உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு லாபகரமான விலையில் விற்பனை செய்து பயனடையலாம்.