சென்னை: ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டது போல் மே மாதம் முழுவதும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, மே மாதம் வழக்குகள் விசாரணை குறித்து முடிவு செய்வதற்காக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் அனைத்து நீதிபதிகள் கூட்டம் நேற்று நடந்தது. ஊரடங்கு காலத்தில் நடந்த வழக்கு விசாரணையைபோல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மே மாதம் முழுவதும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. குறைந்த அளவிலான அமர்வுகளும், தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் நீதிமன்றங்கள் செயல்படும். ஜூன் மாத பணிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.