×

சென்னையில் ஒரே வாரத்தில் 16 போலீஸ், தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா: ஒரே நாளில் 2 எஸ்.ஐ உள்ளிட்ட 5 பேருக்கு பாதிப்பு

சென்னை: கோயம்பேடு, மாங்காடு காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் மற்றும் புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் உள்பட ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரே வாரத்தில் சென்னையில் போலீஸ், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து போலீசாரும் தமிழகம் முழுவதும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாலைகள், காய்கறி, மளிகை கடைகள், மக்கள், வாகன போக்குவரத்தை கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து கண்காணித்து வருகின்றனர். ெசன்னையிலும் இரவு பகல் பாராமல் இவர்கள் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மாநிலத்திலேயே சென்னையில்தான் 768 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா தொற்று மூன்றாம் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களை கட்டுப்படுத்திய சென்னை போலீசாருக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு போலீசார் பாதிப்பது அதிகரித்தே வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாங்காடு காவல் நிலையத்தில் ஸ்பெஷல் மொபைல் இன்சார்ஜ் ஆக கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்த 55 வயது உதவி ஆய்வாளர்  மற்றும் கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து இருவர்  குடும்பத்தினரையும் மற்றும் அவர்களுடன் குடியிருப்பில் வசித்து வந்த குடும்பங்களை சேர்ந்தவர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்துள்ளனர்.  இதுதவிர, சென்னை எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் உள்பட மேலும் இரு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாங்காடு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர். இவர்கள் பணியாற்றிய காவல் நிலையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து மூடினர்.

கடந்த ஒரு வாரத்தில் 4 உதவி ஆய்வாளர்கள் என 8 காவலர்கள், 3 தீயணைப்பு வீரர்கள், ஒரு ஊர்க்காவல் படையினர் என 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது சென்னையில் போலீசாரிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : firefighters ,Chennai , Madras, 16 police, firefighters, corona
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...