தர்மபுரி: இலக்கியம்பட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கியம்பட்டி ஊராட்சி 13வது வார்டுக்குட்பட்ட செந்தில் நகர் அருகே இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் செந்தில்நகர், இலக்கியம்பட்டி, அழகாபுரி, கரூவூல காலனி உள்பட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இந்த ஏரியில் தற்போது பாசம் படிந்தே காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, இலக்கியம்பட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்கள் அழுகியதால் அதில் இருந்து ஏற்படும் துர்நாற்றம், ஏரியை ஒட்டியுள்ள அழகாபுரி பகுதி மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஏரியில் செத்த மீன்களை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.