×

ஜல் சக்தி துறையின் கீழ் காவிரி நதிநீர் ஆணையத்தை கொண்டு வருவது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டி பறிக்கும் கருணையற்ற செயல்

அரசிதழ் திரும்ப பெறாவிடில் போராட்டம்
 ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய விவகாரம் தமிழக ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல். மத்திய அரசின் அரசிதழ் திரும்ப பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது. 2018, பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு அடிப்படையிலான காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்கு ஒரு “வரைவுத் திட்டத்தை” 6 வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் 3 மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், 2018, மே 18ம் ேததி “காவிரி வரைவு திட்டத்தை” அறிவித்தது மத்திய பாஜ அரசு. இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி கொண்டிருந்தது தமிழக அரசு.  இந்த ஆணையத்திற்கும் முழு நேர தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சி துறை செயலாளரையே “பொறுப்பு தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பாஜ அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவோ, தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் “கூடி கலையும் அமைப்புகளாகவே” இன்றுவரை இருந்து வருகின்றன.

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை காவு கொடுத்து விட்டு, இந்த “உரிமை பறிப்பு வைபவங்களை” எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து - மத்திய பாஜ அரசுக்கு பவ்வியமாக - பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது அதிமுக அரசு. வெறும் “எலும்புக்கூடு” அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்த குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பாஜ அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை. கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடுவர் மன்றத்தை அமைத்து கொடுத்து - வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை தமிழகம் பெற்றும் - “மழை பெய்தால் மட்டுமே காவிரி தண்ணீர்” என்ற மன்னிக்க முடியாத துரோகத்தை தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு முன்மொழிய - அதை வழிமொழிந்து - விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் முதல்வர் எடப்பாடி.

இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து - அது தன்னாட்சி அமைப்பு அல்ல - மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட “கைகட்டி” நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டி பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல்.

ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பிறப்பிக்கப்பட்டுள்ள அரசிதழை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய பேரமைப்புகளையும் சேர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ெகாரோனா பேரிடரை ஒன்றிணைந்து வெல்வோம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேவையுள்ளோருக்கு உதவிட தமிழகம் முழுவதுமிருந்து பல தன்னார்வலர்கள் தொடர்புகொண்டனர். அவர்களின் நோக்கத்தை எளிதாக்கவும், உதவி தேவைப்படுவோர் - உதவி வழங்குவோரைத் தொடர்புகொள்ளவும் ‘’நல்லோர் கூடம்’’ எனும் மெய்நிகர் மன்றத்தைத் துவக்கியுள்ளோம்.

இது குறித்து அறிந்துகொள்ளவோ https://www.ondrinaivomvaa.in/nallorkoodam/ என்ற இணைய முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். “நல்லோர் கூடம்” மூலம் இணைந்த தன்னார்வலர்களுடன் காணொலிக் காட்சி வழியாக உரையாடினேன். அவர்களது இரக்க சிந்தனையும், நம்பிக்கையும், இந்தப் பேரிடரை நாம், ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது. இந்த நேரத்தில், தமக்கு உதவிட யாருமில்லை என ஒருவரும் வருந்திடாமல் இருப்பதை உறுதி செய்வோம். ஒன்றிணைவோம் வா!



Tags : Cauvery River Authority ,act ,department ,Jal Sakthi ,Tamil Nadu ,Jal Sakthi Department , Jal Power Department, Cauvery River Authority, Tamil Nadu Farmers, Stalin
× RELATED தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான...