திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடத்திருப்பவர் பிரவீணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மகராசி’ தொடரிலும் நடித்து வருகிறார். இது தவிர பல நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ்சும் கொடுத்து வருகிறார். இவருக்கு மாநில விருதுகளும் கிடைத்துள்ளன. இவரது வீடு திருவனந்தபுரம் கரமனையில் உள்ளது. பிரவீணா வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டில் கோழி கூட்டின் அருகே நல்லபாம்பு வலம்வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர் திருவனந்தபுரம் பூஜப்புரா பாம்பு பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சல்லடைபோட்டு தேடி பார்த்தனர். அப்போது பிறந்து 2 நாட்களே ஆன நல்லபாம்பு குட்டி ஒன்று கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்தது. பாம்பை பூங்கா ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் அதை நடிகை பிரவீணாவிடம் கொடுத்தனர். முதலில் அதை வாங்கியவர் நடுங்கினார். அவருக்கு ஊழியர்கள் தைரியம் ஊட்டினர். இதையடுத்து பிரவீணா பாம்பு குட்டியை கையில் வாங்கி வைத்து கொஞ்ச தொடங்கினார். இந்த வீடியோ காட்சிகளை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. நடிகை பிரவீணா கூறுகையில், பொதுவாக பாம்பை பார்த்தால் அனைவரும் கொல்லத்தான் முயற்சிப்பார்கள். அந்த அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.