சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகின்றன. அதில் கேரளா, கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனாயில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பானது குறைந்து தான் வருகிறது. 3,4 என குறைந்த அளவிலேயே பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பஞ்சாப்பில் இதுவரை 322 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருந்தாலும், ஊரடங்கு உத்தரவு என்பது வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு பஞ்சாபில் ஏற்கனவே தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரிந்தர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு வரும் மே 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.