பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், சப்போட்டாக்களை மரத்திலேயே பழுக்க விட்டுள்ளனர். இந்த பழங்கள் வீணாகி பறவைகளுக்கு இரையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டி, முருகமலை, எண்டப்புளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சப்போட்டா அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சப்போட்டா பழங்களை கிலோ ரூ.40 முதல் 50 வரை விவசாயிகள் விற்று வந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கால் பழக்கடைகள் திறக்கப்படாமல், விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் சப்போட்டா பழங்களை வியாபாரிகள் கிலோ ரூ.10க்கு கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. பழங்களை பறிக்கும் கூலியும், விற்பனை விலையும் ஒன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. இதனால், சப்போட்டாக்களை மரங்களில் இருந்து பறிக்காமல், அப்படியே விட்டுள்ளனர். மரத்திலேயே சப்போட்டாக்கள் பழுத்து, வீணாவதோடு பறவைகளுக்கு இரையாகி வருகிறது. இதுகுறித்து வடுகபட்டி விவசாயி துரைராஜ் கூறுகையில், ‘‘சப்போட்டா கிலோ ரூ.10க்கு விவசாயிகள் கேட்பதால், பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிட்டோம். இவைகளை பறவைகள் தின்கின்றன. இந்தாண்டு பழங்களை பறவைகளுக்கு விட்டு விட்டோம்’’ என்றார்.