×

மேட்டுப்பாளையம் அருகே உணவு தேடி சாலையில் திரியும் காட்டு யானை: பட்டாசு வெடித்து வனத்துக்குள் விரட்டியடிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நேற்று அதிகாலை உணவு தேடி சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை கல்லார் காப்புக்காடு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான யானைகள், காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாடவும், வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கடந்த சில நாட்களாகவே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் காட்டுயானைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. நேற்று அதிகாலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை பகுதியில் காட்டு யானை ஒன்று சாலையோரத்தில் உள்ள கடைகளில் உணவு தேடி நடமாடியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் சைரன் ஒலி எழுப்பியபடி வாகனத்தில் வந்தனர். சைரன் ஒலி கேட்ட காட்டுயானை உடனடியாக அருகில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து நீண்ட நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : road ,Mettupalayam ,forest ,Wild ,Explosion , Wild elephant,road,search , food , Mettupalayam: Explosion of fireworks
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது