டெல்லி: ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை ஜூலை 31 வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடக்கத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்களாலும், பல்வேறு நாடுகளில் வேலை செய்யவும், உயர்கல்விக்காகவும் சென்றவர்கள் இந்தியா திரும்பி வந்ததாலும் கொரோனா வைரஸ் இங்கும் பரவ தொடங்கியது. தற்போது, இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ள நிலையில், 7,027 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும், அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, முக்கிய ஐ.டி நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ், எச்.சி.எல். ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களது ஊழியர்களில் 60 சதவீதத்தினரை கடந்த மாதம் முதல் நேரடியாக வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்தது. அதன்படி, வீட்டிலிருந்தபடியே ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரிய நிறுவனங்களின் அறிவிப்பை சிறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்ய வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பர்ன்சிங் மூலம் ரவிசங்கர் பிரசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களின் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
ஆன்லைன் சுகாதார சேவைகளை தென் மாநிலங்கள் சிறப்பாக கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும். ஊரடங்குக்கு பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.