சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுவதை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் கூடுதலாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதில் உச்சக்கட்டமாக நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 52 ேபர் பாதிக்கப்பட்டனர். அதில் சென்னையில் மட்டும் 47 பேர். நேற்று மாநிலம் முழுவதும் 121 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் சென்னையில் மட்டும் 103 பேர். இதனால், சென்னையில் இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் பொருட்களை வாங்க கும்பல் கும்பலாக கூடுவதால்தான் பாதிப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதனால், சென்னை மாநகரில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த கூடுதலாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பட்டியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.