சென்னை: அகலவிலைப்படியை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசை பின்பற்றியே தமிழ்நாடு அரசும் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது வருந்தத்தக்கது. இதனால் ஓய்வூதியம் பெறுவோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ஏற்கனவே, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் சுமார் 150 கோடி அரசுக்கு அளித்துள்ளோம். ஈட்டிய விடுப்பு ஒப்படைத்தலுக்கு அரசு தற்போது தடை விதித்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா நோய்த்தடுப்பு பணியில் உள்ள ஊழியர்களுக்கும் மேலும் ஓர் இடியாக உள்ளது. ஏன் மத்திய அரசு கூட இந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தடை ஆணையை போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஆணைகளை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.