×

4 நண்பர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; நாகர்கோவிலில் மன்மத வாலிபரிடம் சிக்கி சீரழிந்த பள்ளி மாணவிகள்: லேப் டாப், செல்போன்களில் திடுக் தகவல்கள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கைதாகி உள்ள மன்மத வாலிபரிடம் பள்ளி மாணவிகள் பலரும் ஏமாந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் காசி (26). சமூக வலைதளங்களில் பெண்களுடன் பழகி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்ததுடன், நெருக்கமாக இருந்து அதை வீடியோ பதிவு செய்து மிரட்டியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், காசி தற்போது கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவரும், காசி மீது புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரிலும் காசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் தொடர்ந்து புகார் அளிக்கலாம் என்றும், அவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தற்போது காசி மீதான புகார்களை விசாரிக்க ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு தனிப்படையினர் காசியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், செல்போன்களில் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். லேப் டாப்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான இளம்பெண்களுடன் பல்வேறு கோணங்களில் காசி இருப்பது போன்ற காட்சிகள் அதில் உள்ளன. சென்னை, பெங்களூரில் தான் அதிக போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற தகவல்களில் போலீசார் ரகசியம் காத்து வருகிறார்கள். எந்த விதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 2 தனிப்படையினர் காசியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே காசியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்களின் வீட்டில் சோதனை நடந்தது. தற்போது காசியின் நண்பர்களான நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ஸ்வீட் கடை உரிமையாளர் மகன், ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரின் மகன் உள்பட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காசியின் முகநூல் பதிவுகளில் சில ஆபாசமான தகவல்களும் உள்ளன. குறிப்பாக நாகர்கோவிலில் உள்ள பிரபல மகளிர் பள்ளி ஒன்றில் இருந்து ஏராளமான மாணவிகள் தனது வசம் இருப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள் பலரை காசி, சீரழித்த தகவல் கிடைத்துள்ளது. தனக்கு அறிமுகமான மாணவி ஒருவர் மூலம் பல மாணவிகளை தனது வசப்படுத்தி அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்களையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காசி மட்டுமே இந்த நாசகரமான காரியங்களை ஒரு நபராக இருந்து செய்திருக்க வாய்ப்பு இல்லை. அவருடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் சிலரும் நிச்சயம் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று உறுதியாக கூறப்படுகிறது. எனவே காசியின் நட்பு வட்டாரத்தை தான் தனிப்படை போலீசார் குறி வைத்துள்ளனர்.

போட்டோக்கள் மற்றும் வீடியோவில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மட்டுமின்றி, அவருடன் நெருக்கமாக அமர்ந்துள்ள இளம் பெண்கள் பற்றிய விபரங்களையும் தனிப்படை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் யார், யார் என்பன போன்ற  தகவல்களை சேகரித்து அவர்களையும் விசாரித்து வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டது போல்,  காசி தலைமையில் நாகர்கோவிலும் பல பெண்கள் சீரழிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர்.

லைக் போட்டு லைப்பை இழந்து விடாதீர்கள்
காசியின் லீலைகளில் வெளியான சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெண்கள் உஷாராக இருக்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், பல்வேறு விழிப்புணர்வு பதிவுகளை காவல்துறை வெளியிட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் எஸ்.பி.யின் மொபைல் எண்ணான 94981 11103 க்கு புகார் மனுக்களை அனுப்பலாம் என்று கூறி உள்ள காவல்துறையினர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரக்கூடிய படங்களுக்கு லைக் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களுக்கு லைக் போட்டு லைப்பை இழந்து விடாதீர்கள் என பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Trial ,friends ,Debut schoolgirls ,Nagercoil ,Manmadhavaril ,Schoolgirls ,Manmadhavil , In Nagercoil, schoolgirls, lap top, cellphone
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...