சியோல்: சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211,450 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,063,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 921,427 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலால் சீனா கடும் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில்தான் அதிகம் பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், உடனடியாக செயல்பட்ட தென் கொரியா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தியது. இதன் காரணமான கொரோனா பரவல் தென் கொரியாவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் 222 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்கனவே உள்ள வைரஸ் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதா? அல்லது புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டதா? என்பது குறித்து தென் கொரிய மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள், கொரோனா வைரஸ் குறித்து புதிய புரிதலை அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சீனாவிலும் குணமடைந்த பலருக்கு மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை வைரஸ் மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளதாகவும், முழு மையாக குணமடைய மருத்து ஒன்றுதான் தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.