பல்லாவரம்: மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). தனியார் நிறுவன டிரைவர். இவருக்கு அபிராமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நேற்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள செங்கல் சூளை பகுதிக்கு தனது நண்பருடன் சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த நண்பர் அங்கிருந்து தப்பி சென்று, ரஞ்சித்குமாரின் உறவினர்களிடம் தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, ரஞ்சித்குமார் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கொலையாளிகள் ரஞ்சித்குமாரின் மர்ம உறுப்பையும் அறுத்துச் சென்றது தெரிந்தது.
தகவலறிந்து வந்த மாங்காடு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மலையம்பாக்கம் பகுதியில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதை ரஞ்சித்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், மணல் கடத்தல் கும்பலுக்கும், ரஞ்சித்குமாருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகறாறு ஏற்பட்டு, மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக கொலை நடந்ததா அல்லது கொலை நடந்த உடன் மர்ம உறுப்பை அறுத்துச் சென்றதால் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.