சென்னை: தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க தேவையான விவரங்கள் அடங்கிய மத்திய அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது மற்றும் ஐவிஆர்எஸ் செயலியை அனைத்து அரசு அலுவலர்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்பேரில், அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா நுண்ணுயிரி தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய ஆரோக்கிய சேது செயலி மற்றும் ஐவிஆர்எஸ் கோவிட்-19 செயலி ஆகியன அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேணடிய வழிமுறைகளை அறிந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயலிகளை துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அவரவர் கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது குறித்து நாள்தோறும் அரசுக்கு அறிக்கை அனுப்பும் பொருட்டு பொறுப்பு அலுவலராக பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் துறையின் பெயர், பணியாளர்களின் எண்ணிக்கை, ஆரோக்கிய சேது, கோவிட் 19 தரவிறக்கம் செய்த நபர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை மண்டல இணை ஆணையர்கள் நாள்தோறும் பெற்று தொகுத்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.