லண்டன்: கொரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்ட பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி முதல் முறையாக சாம்பியனாக உள்ளது. இங்கிலாந்து கால்பந்து கிளப்களுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி உலக அளவில் பிரபலமான தொடராகும். 1992 முதல் நடந்துவரும் இத்தொடரின் நடப்பு சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி தொடங்கியது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி உட்பட 20 கிளப்கள் பங்கேற்றன. மே மாதம் வரை நடக்க இருந்த தொடர் கொரோனா பீதி காரணமாக மார்ச் 10ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. எஞ்சிய 81 போட்டிகள் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பிரிமீயர் லீக் போட்டி மட்டுமல்ல மற்ற போட்டிகளும் எப்போது நடக்கும் என்பதே உறுதியாக தெரியாத நிலை. அதனால் சில போட்டித் தொடர்கள் கைவிடப்படுவதாகவும், தொடங்காத போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு , ‘பிரிமியர் லீக் போட்டிகள் நடத்த முடியாவிட்டால் லீக் சுற்றுகளின் அடிப்படையில் சாம்பியன் யார் என்பது முடிவு செய்யப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதனால் லிவர்பூல் எப்சி கிளப் முதல் முறையாக இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் சாம்பியனாக உள்ளது. அந்த அணி இதுவரை 29 போட்டிகளில் விளையாடி 27 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 82 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி அணி 28 போட்டிகளில் 18 வெற்றி, 3 தோல்வி, 7 டிராவுடன் 57 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.