×

நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு மளிகை பொருட்கள்: ரஜினிகாந்த் வழங்குகிறார்

சென்னை: தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த நலிந்த  தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று, நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கடிதம் எழுதினார். அதற்கு உடனே உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து கே.ராஜன் விடுத்துள்ள அறிக்கை: கொடூரமான கொரோனா கிருமி தாக்குதல் காரணமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் நூற்றுக்கணக்கானோர் பொருளாதார சிரமத்துடன் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு தயாரிப்பாளர்களில் சிலர் அரிசி மூட்டைகளும், பணமும் கொடுத்து உதவி செய்துள்ளனர்.ஒவ்வொரு உறுப்பினரின் குடும்பத்துக்கும் மேலும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அதிகம் என்பதால், அவர்களுக்கு உதவும்படி ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினேன். பலபேரை வாழ வைத்தவர்கள், கொடுத்துப் பழகியவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் இன்று பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர்.

யாரிடமும் உதவி கேட்காத தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன். உடனே 750 தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதாக ரஜினிகாந்த் உறுதி அளித்தார். அவருக்கு நன்றி. வரும் மே 3ம் தேதி உதவி பெறும் தயாரிப்பாளர்களுக்கு நேரமும், இடமும் அறிவிக்கப்படும். நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை கருதி, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், அனைவரும் ஒரே இடத்தில் கூட்டமாக சேராமல் தி.நகர்,  சாலிகிராமம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் வைத்து விநியோகம் செய்யப்படும். இடமும், நேரமும் பிறகு அறிவிக்கப்படும்.

Tags : Rajinikanth ,producers , Rajinikanth, supplies, groceries, 750 poor producers
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...