×

கொரோனா பாதித்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடையூறு செய்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு அவசர சட்டம்

சென்னை: கொரோனா பாதித்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது இடையூறு செய்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. சென்னையில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய மருத்துவர் சைமன் இறந்ததையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரச் சட்டத்தின்படி ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கிகடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில்  தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, பிரிவு-74 ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coroner , Corona, burial, prison, Tamil Nadu government
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...