ஈரோடு: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகள், தெருநாய்கள் ஆகியவையும் உணவுக்காக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவின்றி சிரமப்படும் ஆதரவற்ற தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும் உடல் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுவோர் ஈரோடு பிராணிகள் துயர் தடுப்பு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தினமும் 600 தெருநாய்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஈரோட்டில் மட்டும் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், இந்திரா நகர், கருங்கல்பாளையம், ஆர்.டி.ஓ.ஆபீஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் 200 நாய்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் குழந்தைவேலு கூறியதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு காலத்தில் தெருநாய்கள், கால்நடைகள் பாதிக்காத வகையில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் தெருநாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதையடுத்து பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஈரோடு, கோபி, சத்தி, நம்பியூர், கொடுமுடி, பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 600 தெரு நாய்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
ஈரோட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் 200 தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு, பிஸ்கட் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 140 கால்நடைகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவால் 70க்கும் குறைவாகவே கொண்டு வரப்படுகிறது. இது தவிர நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குழந்தைசாமி கூறினார்.