×

மின் வாரிய அறிவிப்பு காரணமாக மின் கட்டணம் இருமடங்கு உயரும் அபாயம்: நிதி நெருக்கடியில் சிக்கும் நுகர்வோர்

பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் வேலை இழந்து வருமையில் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, வங்கிகள் 3 மாதத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இஎம்மை வசூலிக்க விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டது. கடந்த முறை செலுத்திய மின் கட்டண தொகையையே இந்த முறை செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 மாதத்திற்கு ஒருமுறை வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில்  மின் அளவு கணக்கீடு செய்து, பணம் செலுத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை இந்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் செலுத்த வேண்டும்.

2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார பயன்பாட்டு அளவை மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து கணக்கிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா  வைரஸ் காரணமாக ரீடிங் எடுக்க ஊழியர்கள் நேரில் வருவதை தவிர்த்து, கடந்த முறை எவ்வளவு பணம் செலுத்தப்பட்டதோ  அதையே இந்த மாதம் செலுத்தினால் போதும் என மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், அந்த பணத்தை மே மாதம் முதல் வாரத்தில் கட்டலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் 2 மாதத்திற்கு முன்பு கட்டிய  பணம் சீரான இடைவெளியில் சீரான மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததற்கான கட்டணம். ஆனால் தற்போது ஒரு மாதமாக அனைவரும் வீட்டில் உள்ளனர். அதனால் வீட்டின் பிரிட்ஜ், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தப்படுவதால், கூடுதல் கட்டணம் கண்டிப்பாக வரும்.

 தற்போது ரீடிங் எடுத்து, முறைப்படி கட்டணம் செலுத்தி இருந்தால் ஓரளவுக்கு மின் கட்டணம் பகிர்ந்து  சமாளிக்க கூடிய அளவிற்கு இருந்திருக்கும். ஆனால், தற்போது கடந்த 2 மாத தொகையை கட்டி விட்டு  இரண்டு மாதம் கழித்து மீண்டும் புதிதாக மின் கணக்கீடு எடுக்கும்போது அந்த மின் கணக்கீட்டின் அளவு மிக அதிகமாக இருக்கும்.  உதாரணத்திற்கு 350 யூனிட்டிலிருந்து 500 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் 1,000 ரூபாய் ரூபாய்க்கு குறைவாக வரும். 500 யூனிட்டுக்கு மேல் சென்றால் பணம் அதிகரிக்கும் உதாரணத்திற்கு 499 யூனிட் வந்தால் அதற்கு ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே 510 யூனிட்  வந்தால் 1846 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு 500 யூனிட்டுக்கு மேல் செல்லும்போது கட்டணம் மிக அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி யூனிட் அளவு அதிகரிக்க அதிகரிக்க யூனிட்டுக்கான தொகை மற்றும் நிலை கட்டணமும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

தற்போது உரடங்கால் அனைவரும் வீட்டில் உள்ள நிலையில், மின் பயன்பாடு அதிகரித்து, இரண்டு மாதம் கழித்து மின் அளவை  கணக்கெடுக்கும் போது கண்டிப்பாக 600 யூனிட் முதல் 800 யூனிட்  வரை மின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மின் கட்டணமாக 4 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது இதையெல்லாம் சிறிதும் யோசிக்காத மின் வாரிய அதிகாரிகளும், மின்சார துறை அமைச்சரும் தற்போதைக்கு என்ன செய்வது என்பதை மட்டுமே யோசிக்கின்றனர். வருங்காலத்தில் நடுத்தர வர்க்கத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை என  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை ஒரே சீராக அதாவது 500 யூனிட்டுக்கு எவ்வளவு தொகை மின் கட்டணமாக  வசூலிக்கப்படுகிறதோ அதே தொகையை 1000 யூனிட் வரை செலுத்த அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : crisis ,announcement ,E-Board ,Consumers , Risk ,electric bill doubling, E-Board announcement, Consumers caught,financial crisis
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...