பழநி : கொரோனாவால் பழநியில் மரத்தடி சலூன் கடைகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் முடி திருத்தம் செய்ய, முகச்சவரம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் மரத்தடியில் சவரம் செய்யும் தொழிலாளர்களை நாடி வருகின்றனர். எனவே தற்போது மரத்தடி சலூன் கடைகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பழநியில் 30 வருடங்களாக மரத்தடியில் சிகை திருத்தும் தொழில் செய்து வரும் மருதமுத்து கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை எங்கள் தொழில் நன்றாகத்தான் பேய்க் கொண்டிருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடு எங்களது தொழிலும் கால்ஊன்றியதால் மெல்ல மெல்ல நலிவடைய ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் 70 வயதை கடந்த பழைய ஆட்களாக மட்டுமே இருந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஊரில் இருந்த சலூன் கடைகள், பார்லர்கள் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் தற்போது சிகை திருத்தம் செய்து கொள்ள எங்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். தற்போது தொழில் வேகமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.