துபாய்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் தள்ளி வைக்கப்பட உள்ளதால், அதன் தலைவர் ஷசாங்க் மனோகர் பதவிக்காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐசிசி தலைவராக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த ஷசாங்க் மனோகர். தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2 ஆண்டுகளாக பதவியில் உள்ள இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூ்ன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஐசிசியின் ஆண்டுக் கூட்டம் ஜூன் மாதம் நடைபெற இருந்தது.கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐசிசி கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. இக்கூட்டம் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட உள்ளது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் ஏற்கனவே தலைவர் பதவியில் உள்ள ஷசாங்க் மேலும் 2 மாதங்களுக்கு தலைவராக நீட்டிக்கப்படலாம்.அதே நேரத்தில் ஆகஸ்டில் நடைபெறும் கூட்டத்தில் ஷசாங்க் மீண்டும் தலைவராகத் தொடர வேண்டும் என்று இந்தியா உட்பட சில நாடுகள் விரும்புகின்றன.
இங்கிலாந்து/வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் கொலின் கிரேவ்ஸ் ஐசிசியின் புதிய தலைவராக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளின் ஆதரவும் இருக்கிறது. எனவே கொலின் தலைவராக வாய்ப்புகள் அதிகம். எப்படி இருப்பினும் கொரோனா பீதி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவுக்கு வரும்பட்சத்தில் ஐசிசி கூட்டம் நடக்கும். அப்போது பழைய தலைவர் தொடர்வாரா, புதிய தலைவர் கிடைப்பாரா என்பது தெரிய வரும்.