×

சென்னை அடுத்த குன்றத்தூரில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை அருகே உள்ள குன்றத்தூர், மணிகண்டா நகரைச் சேர்ந்த 38 வயது தனியார் நிறுவன ஊழியர், மாணிக்கம் நகரை சேர்ந்த 38 வயது காய்கறி வியாபாரி என இருவருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்ட காய்கறி வியாபாரியின் தாய், மனைவி, மகள், மகன் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் ஆறு பேருக்கு தொடர்ந்து சளி, இருமல் இருக்கவே சந்தேகத்தின்பேரில் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags : Chennai ,Kundathoor , Madras, Corona, Family
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!