×

மாநில நிதி உரிமையை காப்பாற்ற திமுக எம்பிக்கள் தயார் தமிழக உரிமையை காக்க முன்வராவிட்டாலும் மத்திய பாஜ காலில் வீழ்ந்து கிடப்பதா? ஓபிஎஸ்சுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக நிதி உரிமையைக் காக்க முன்வராவிட்டாலும் மத்திய பாஜவின் காலில் மாநில வீழ்ந்து கிடப்பதா என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரிடர்களில் கட்சி அரசியல் செய்வதே எமக்குப் பெருமை என்று, பாதி மனசாட்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமியின் கீழ் நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாஜ மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும், “15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை” கெட்டியான திரைபோட்டு மறைப்பதற்காக, என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

முதல்வரின் முயற்சியால் 2020-21-ம் ஆண்டிற்கு 4,025 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டு, முதல் தவணை பெறப்பட்டுள்ளது என்று இப்போது தன்னிச்சையாக, யாரும் கேட்காமலே வக்காலத்து வாங்கும் நிதி அமைச்சர், அதே நிதிநிலை அறிக்கையில், மொத்தமாக 74 ஆயிரத்து 340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் இம்மானியத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பாஜ அரசைக்  குற்றம் சாட்டியது ஏன்?. “மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது” என்றும், “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்” என்றும் காரசாரமாக ஆற்றிய உரை யாருடையது?

சட்டமன்றத்தில் கேட்ட அந்தக் குரல், நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடையதுதானே? அல்லது பின்னணிக் குரலா? இவ்வளவையும் வக்கணையாகப் பேசிவிட்டு இன்றைக்கு, முகத்தை சட்டைப் பைக்குள் புதைத்துக்கொண்டு, அந்தர்பல்டி ஆகாயபல்டி அடித்து - “முதலமைச்சரின் முயற்சியால் நிதிப் பகிர்வு அதிகம் கிடைத்தது” என்று அரண் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் நிர்ப்பந்தமா, அல்லது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையா? “15-வது நிதிக்குழு முன்பு தமிழக நிதியுரிமைக்காக முதலமைச்சர் வாதாடினார்” என்று கூறியிருப்பதை, “மலிவான அரசியல்” என்று நான் கூறிடவில்லை. ஏனென்றால், நிதி அமைச்சராக இருக்கும் உங்களுக்குத்தான், உங்கள் இலாகா யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியும்.

ஆனால் நான் கேட்க விரும்புவது, 15-வது நிதிக்குழுவிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன? அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை? நிதிக்குழுவிடம் நேரில் முன் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? அதில் ஒப்புக்கொள்ளப்பட்டவை எத்தனை? அவற்றைத் தமிழக மக்களுக்கு வெளியிடத் தயாரா? நிதிப் பகிர்வுக்குத் தேவையான அளவுகோல் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’  எல்லாம் தமிழக அரசு கேட்டு வாங்கியதா? இப்படிக் கேட்டு வாங்கியதன் விளைவாகத்தான், 15-வது நிதிக்குழு, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை 4.189 சதவீதம் என்று நிர்ணயித்துக் கொடுத்ததா? இந்த நிலை அ.தி.மு.க. அரசால்தான் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வெளியிட முடியுமா?

நிதிக்குழுவிற்கு ஆய்வு வரம்புகள் வெளியிட்ட போதே, அதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டு - பிரதமருக்குக் கடிதம் எழுதி - பா.ஜ.க. ஆளாத பத்து மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதி ஆதரவு திரட்டியது தி.மு.க. மட்டுமே.  வரலாறு காணாத 4.56 லட்சம் கோடி கடனை தமிழக மக்கள் தலையில் சுமத்தி விட்டு - நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து மாநிலத்தை அதோகதி நிலையில் நிறுத்தி இருப்பது அ.தி.மு.க. அரசு என்பதுதான் அப்பழுக்கற்ற உண்மை. மாநில நிதி உரிமையைக் காப்பாற்ற தி.மு.க. எம்.பி.,க்கள் எப்போதும் முன்வருவார்கள் என்ற ஆக்கபூர்வமான அரசியலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிதி அமைச்சர் தவியாய்த் தவிக்கலாம். தணல்மேல் விழுந்த புழுவாய்த் துடிக்கலாம். ஆனால், கொரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து, “அரசியல் காழ்ப்புணர்ச்சி” -

“அரசியல் ஆதாயம் தேடும்” முயற்சி என்றெல்லாம்,  தனது நிலையை நினைத்து, திரித்துத் திசை திருப்பி, அறிக்கை விட்டிருப்பதற்கு உள்ளபடியே வருந்துகிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்; இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பா.ஜ.க.,வின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MPs ,BJP ,state ,DMK ,MK Stalin ,OPS , State Finance, DMK MPs, Tamil Nadu, Central BJP, OPS, MK Stalin
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...