மூணாறு: மூணாறில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடிய சாலையை ஆக்கிரமித்து தினந்தோறும் இரவு நேரங்களில் ‘படையப்பா’ யானை உல்லாச நடை பயணம் மேற்கொண்டு வருகிறது. கேரள மாநிலம், மூணாறில் தோட்டத்தொழிலாளர்களால் செல்லமாக ‘படையப்பா’ என அழைக்கப்படும் கொம்பன் யானை கடந்த சில நாட்களாக மூணாறில் முக்கிய சாலைகளில் முகாமிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மூணாறில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் இந்த யானை நேற்று மாலை 6 மணியளவில் மூணாறுக்குள் நுழைந்தது.
நல்லத்தண்ணி எஸ்டேட், அந்தோணியார் காலனி போன்ற பகுதிகளில் சுற்றித்திரிந்த கொம்பன் யானை இரவு 8 மணியளவில் மூணாறுக்குள் நுழைந்தது. யானையை கண்ட பொதுமக்கள் ஓசைகள் எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்ட முயற்சித்தினர். ஆனால் இதை கண்டுகொள்ளாத கொம்பன் யானை மூணாறில் வலம் வந்தது. இந்த யானை யாரையும் துன்புறுத்துவது இல்லை. யானையை கண்ட பொதுமக்கள் செல்போனில் புகைப்படங்கள் எடுத்தனர். பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.