சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 10,000 வாழை மரங்கள் முறிந்து சேதமானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். நேந்திரன், கதலி, ஜி9 உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை தாளவாடி அருகே திகினாரை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதோடு லேசாக மழை பெய்தது.
காற்றின் வேகம் தாங்காமல் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 10 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்ததால் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டத்திற்கு ஏற்பட்டுள்ளது. சேதமான வாழை மரங்களை கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.