கும்பகோணம்: திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை தாக்கி தாலியை கழட்டிய பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கணவர் புகார் செய்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்த நடராஜன் மகள் நதியா (22). அரியலூர் மாவட்டம் வடவாறு பகுதியை சேர்ந்த ராஜா மகன் அருண்குமார் (23). இருவரும், திருப்பனந்தாளில் உள்ள பள்ளி, கல்லூரியில் படித்தனர். பின்னர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அருண்குமார் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். கல்லூரியில் நதியா படித்து வந்தார். பள்ளி பருவத்திலே காதல் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கின்போது திருப்பூரில் இருந்து வந்த அருண்குமாரும், நதியாவும் கடந்த 19ம் தேதி அணைக்கரை வில்லியாண்டவர் கோயில் முன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் இந்த திருமணத்தை ஏற்கவில்லை.
இதையடுத்து கடந்த 21ம் தேதி காதல் தம்பதி, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கூறினர். அப்போது இன்ஸ்பெக்டர் கவிதா முன்னிலையில் காவலர் ஜெயப்பிரியா, நதியாவை சாதி பெயரை கூறி திட்டி சூ காலால் மிதித்து தாலியை கழட்டுமாறு கூறினார். பின்னர் அவரே தாலியை கழற்றினார்.
பின்னர் தாக்கியபோது நதியா மயங்கி விழுந்தார். இந்த தகவல் அறிந்ததும் டிஎஸ்பியிடம் நீலப்புலிகள் இயக்க தலைவர் புரட்சிமணி முறையிட்டார். இதையடுத்து அருண்குமார், நதியாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசாருக்கு திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நதியா நான் அருண்குமாரோடு தான் வாழ்வேன் என கூறியதால் அவரை கணவரோடு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் தனது மனைவியையும், தன்னையும் சாதி பெயரை சொல்லி தாக்கிய திருப்பனந்தாள் பெண் காவலர் ஜெயப்பிரியா மீது நவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென திருப்பனந்தாள் போலீசில் அருண்குமார் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.