சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இறக்க நேரிட்டால் உரிய மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும். மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில், தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் வளர்மதி ஆகியோரிடம் காணொலி காட்சி மூலம் உரையாடினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, , கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக முதல்வர் எடப்பாாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் எடப்பாடி அவர்கள் மத்தியில் பேசியதாவது: மருத்துவர்கள் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றவர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற அனைவரையுமே எங்களுடைய அரசு முழுமையாக பாதுகாக்கும். தங்கும் வசதி, உணவு, குடும்பத்தாருக்கு தேவையான வசதிகள் அனைத்தும் எங்களுடைய அரசு செய்து கொடுக்கும். துரதிர்ஷ்டவசமாக ஏதாவது தொற்று நோய் ஏற்பட்டால், சிகிச்சை அளிக்கின்ற செலவு முழுவதையும் அரசே ஏற்கும். அந்த சிகிச்சை பெறுகின்ற காலம் பணிக்காலமாக கருதப்படும், அதற்கும் ஊதியம் வழங்கப்படும். பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால், குடும்ப நிதியாக ₹50 லட்சம் அரசால் வழங்கப்படும். குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றபொழுது இறந்தவர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவர். சிகிச்சை அளிக்கக்கூடியவர்கள் அனைவருக்குமே பாராட்டுச் சான்றிதழும், நற் சான்றிதழும் அரசின் சார்பாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.