இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் கேரத் பேல் (30 வயது), கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்கும் விதமாகத் தான் பிறந்த கார்டிப், வேல்ஸ் பல்கலை. மருத்துமனைக்கு 4.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இந்த மருத்துவமனைக்கு எனது நெஞ்சில் மிகவும் ஸ்பெஷலான ஒரு இடம் எப்போதுமே உண்டு. அங்குதான் நான் பிறந்தேன். எனக்கு மட்டுமல்ல… எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்த மருத்துவமனை மிகுந்த ஆதரவாக இருந்துள்ளது. இக்கட்டான நேரத்தில் நாம் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த சிறு உதவியை செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். வேல்ஸ் தேசிய அணிக்காகவும், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வரும் கேரத் பேல் செய்துள்ள இந்த உதவி ட்விட்டரில் பாராட்டுகளை அள்ளி வருகிறது.